Tuesday, 15 September 2020

கர்மா

 

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா

சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்

முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த

புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.


கர்மா என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? மனித வாழ்க்கை கர்மாவைச் சார்ந்தே அமைகிறதா? இதனை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து எனக்குத் தெரிந்தவற்றைச் சுருக்கமாக இங்கே பகிர்கிறேன்.

நம்முடைய கர்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1.         சஞ்சித கர்மா: நாம் பல பிறவிகளாகச் சேர்த்து வைத்திருக்கும் வினைகளின் மொத்தத் தொகுப்பு. இது நாம் பிறக்கும்போதே நம்முடன் எடுத்து வரும் கர்ம மூட்டையாகும்.

2.         பிராரப்த கர்மா: அந்தப் பெரிய கர்ம மூட்டையிலிருந்து, இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதற்காகப் பிரிக்கப்பட்ட ஒரு சிறு பகுதி. இதுவே நம்முடைய தற்போதைய வாழ்வின் இன்ப-துன்பங்களைத் தீர்மானிக்கிறது.

3.         ஆகாமி கர்மா: இந்தப் பிறவியில் நாம் செய்யும் செயல்களின் மூலம், வருங்காலத்திற்காகப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளும் பாவ-புண்ணியங்கள்.

ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் செயல்களின் விளைவுகள்—அவை நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும்—நிழலைப் போல நம்மைத் தொடரும். நம்முடைய கர்மவினைப்படியே அடுத்தடுத்த பிறவிகள் அமைகின்றன.

எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அவரவர் செய்த வினைகளை அவரவரே அனுபவிக்க வேண்டும்; அதனை யாராலும் மாற்ற முடியாது. சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் வாழ்க்கை கர்மவினையின் அடிப்படையிலேயே அமைகிறது. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் இன்பங்களும் துன்பங்களும் நம்முடைய பூர்வ ஜென்ம கர்மப் பலன்களே ஆகும்.

"என்னுடைய பாவப் புண்ணியங்களே எனது பிறவியை நிர்ணயிக்கின்றன. கர்மவினைகள் தீரும் வரை இந்தப் பிறவிச் சுழற்சி தொடரும். எனவே, இப்பிறவியில் எனக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் நம் வாழ்வை ஒப்பிட்டுப் புலம்புவதில் அர்த்தமில்லை; அது இருப்பதை விடுத்து இல்லாததைத் தேடி நிம்மதியைக் குலைப்பதோடு, புதிய வினைகள் சேரவும் வழிவகுக்கும்.

நான் எடுத்துள்ள இந்தப் பிறவிப்பாதை கரடுமுரடானதாகவும் இருக்கலாம் அல்லது சோலைவனமாகவும் இருக்கலாம். சோலைவனப் பாதையில் பயணிப்பவனுக்கு வாழ்க்கை இனிமையாக இருக்கும்; கரடுமுரடான பாதையில் செல்பவனுக்குத் துன்பங்கள் நேரிடலாம். இருப்பினும், அத்துன்பங்களை எதிர்கொள்ள இறைவன் மனிதனுக்குப் 'பகுத்தறிவை' வழங்கியுள்ளார். அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தித் நமக்கு ஏற்படும் துன்பங்களின் வீரியத்தைச் சற்றே குறைத்துக்கொள்ள முடியும். அதற்காகவே பிரார்த்தனைகள், பரிகாரங்கள் மற்றும் தான தர்மங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவை துன்பத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவுமே தவிர, வினைகளை முற்றாக நீக்கிவிடாது.

ஒரு சிறு உதாரணம்:

எனது ஊழ்வினைப் பயனாக இந்தப் பிறவியில் எனக்கு இரண்டு கால்கள் இல்லை என்று வைத்துக்கொள்வோம். கர்மாவின்படி நான் அந்த நிலையை அனுபவித்துதான் ஆகவேண்டும்; இழந்த கால்கள் மீண்டும் முளைக்கப்போவதில்லை. ஆனால், இறைவன் கொடுத்த பகுத்தறிவைக் கொண்டு செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு என்னால் இயல்பாக நடக்க முடியும். அதேபோல், பிறவிச் செவிடாக இருந்தால், கேட்கும் கருவியைப் பொருத்திப் பிறர் பேசுவதைக் கேட்க முடியும். இவையே பகுத்தறிவைக் கொண்டு நாம் எதிர்கொள்ள வேண்டிய கர்ம பலன்களாகும்."

 "தீர்க்க முடியாத கர்மவினைகளும் உலகில் உண்டு; பிறவியிலேயே வாய் பேச முடியாமல் போவது, மனவளர்ச்சி குன்றிப் பிறப்பது மற்றும் கொடிய நோய்கள் போன்றவை இதற்கு உதாரணங்கள். இருப்பினும், எவ்வளவு வலிமையான கர்மாவாக இருந்தாலும், இறைவனின் அருளாலும் முறையான வழிபாட்டாலும் அதன் வீரியத்தை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும்.

 இப்பிறவிக்கு நான் மட்டுமே முழுப் பொறுப்பு, வேறு எவரும் காரணமல்ல. எனது பெற்றோர்கள் இப்பிறவிக்கு ஒரு கருவியாக அமைந்தார்கள், அவ்வளவே. இந்த உடலுக்கு அவர்கள் இட்ட பெயர் 'சந்திரசேகரன்'. நான் இந்த உடலில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் ஒரு பயணி. எனது கர்மவினைக்கு ஏற்பவே நான் இந்தப் பிறவியை எடுத்துள்ளேன்.

வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் நானே பொறுப்பு; இதனைத்தான் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று புறநானூறு மிக அழகாகக் கூறுகிறது.

எனக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடு முடிந்தவுடன், இந்த உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும். அப்போது உயிர் வாழ்ந்த இந்த உடல் பயனற்றுப் போகும்; அதற்கு 'பிணம்' என்று புதிய பெயரும் வந்துவிடும்.

நான் மீண்டும் பிறவி எடுப்பேன்; ஆனால் எங்கே, எப்போது, எப்படி என்பது எவருக்கும் தெரியாது. நான் எடுத்த பிறவிகளுக்குக் கணக்கே இல்லை. மீண்டும் எங்காவது ஓர் இடத்தில் பிறப்பேன்; இப்படியே பிறப்பும் இறப்பும் சங்கிலித் தொடர் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இறுதியில், தனியாக வந்த நான், தனியாகத்தான் செல்ல வேண்டும்; யாரும் என்னுடன் வரப்போவதில்லை. என்னுடன் வரப்போவது நான் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே!"

கர்மாவிலிருந்து விடுபடும் வழிமுறைகள்

"நான் பிறக்கும்போதே பாவ-புண்ணியங்கள் நிறைந்த ஒரு கர்ம மூட்டையைச் சுமந்துதான் வந்தேன்; அது இப்போது அதன் பலன்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இப்பிறவி முடிந்து நான் செல்லும்போது, செய்த நற்செயல்களால் புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டு செல்வேனா? அல்லது மேலும் பாவ மூட்டையைச் சுமந்து செல்வேனா? இவை எதுவுமின்றி கர்மவினைகள் அனைத்தையும் தீர்த்துவிட்டு 'வினைப்பயன் அற்ற' முக்தி நிலையில் செல்வேனா? என்பது அறியாததே.

கர்மவினையின் தாக்கத்தைக் குறைக்க இரண்டு முக்கிய வழிகள் உள்ளன:

1.         ஒழுக்கமான வாழ்வு: இப்பிறவியில் ஒரு சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்ற உறுதியான கொள்கையை வகுத்துக்கொள்வது. இதற்கு மன ஒழுக்கம், சொல் ஒழுக்கம் மற்றும் செயல் ஒழுக்கம் ஆகிய மூன்றையும் உயிர் மூச்சாகக் கடைபிடிக்க வேண்டும்.

2.         ஞான மார்க்கம்: தியானம், யோகா மற்றும் வாசியோகம் போன்றவற்றை முறையாகக் கற்று 'பிரம்ம ஞானத்தை' அடைவது. பிரம்ம ஞானம் என்பது பிறப்பு-இறப்பற்ற பேரின்ப நிலையாகும். இன்றைய இயந்திரமயமான சூழலில் இதனைப் பின்பற்றுவது சற்றே கடினமான காரியமாக இருக்கலாம்.

எனவே, அனைவரும் எளிதாகக் கடைபிடிக்கக்கூடிய சில நற்செயல்களை இங்கே பகிர்ந்துள்ளேன். இயன்றவரை இவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்:

•           அன்னதானம்: மாதம் ஒருமுறை உங்கள் முன்னோர்களை நினைத்து, பசியால் வாடும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். இது பித்ரு தோஷங்களை நீக்கி, கர்மாவின் பாரத்தைக் குறைக்க உதவும்."

 எளிய கர்மப் பரிகாரங்கள்:

•           ஜீவகாருண்யம்: காகம், குருவி, நாய், பூனை, எறும்பு மற்றும் மீன் போன்ற வாயில்லா உயிரினங்களுக்கு உணவிடுங்கள். பசி தீர்க்கும் இந்தப் புண்ணியம் உங்கள் துயரைக் குறைக்கும்.

•           ஆதரவற்றோருக்கு உதவுதல்: ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த நிதி உதவியையோ அல்லது பொருட்களையோ தர்மம் செய்யுங்கள்.

•           பிதுர் தர்ப்பணம்: நம் முன்னோர்களின் ஆசி என்றும் நம்மைப் பாதுகாக்கும். எனவே, மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் மறக்காமல் பிதுர் தர்ப்பணம் செய்யுங்கள்.

•           எறும்பு ஊட்டம்: உங்கள் வீட்டிற்கு அருகில் எறும்புப் புற்று இருந்தால், பச்சரிசி மாவில் சர்க்கரை கலந்து அங்கு தூவுங்கள். இதனைத் தினமும் காலையிலோ அல்லது பௌர்ணமி அன்றோ செய்வது மிகுந்த நன்மையைத் தரும்.

•           உழவாரப்பணி: இறைத் தலங்கள், ஆசிரமங்கள் மற்றும் பொது இடங்களுக்குச் சென்று உங்களால் முடிந்த உடல் உழைப்பை (தொண்டு) அர்ப்பணியுங்கள்.

"மேலே குறிப்பிட்ட இந்தப் பரிகாரங்கள் அனைத்தும், உங்கள் கர்மவினைகளின் தீவிரத்தைக் குறைத்து, வாழ்வை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றப் பெரிதும் உதவும்."



வாழ்க வளமுடன் 





No comments:

Post a Comment

நீங்கள் கொடுத்தது...

  தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகன...